Wednesday, July 27, 2011

மறந்துவிட்ட மன்னிக்கும் தன்மை!

Post image for மறந்துவிட்ட  மன்னிக்கும் தன்மை!
விட்டுக் கொடுக்கும் தன்மை – முஸ்லிம்களிடத்தில் இது குறைந்து வருவதனால் தான் இன்று நம்மிடையே பகைமை உணர்வுகள் அதிகம் ஏற்பட்டு பல பிணக்குகளும் பிரிவுகளும் உண்டாகியிருக்கின்றன. இதில் வேதனையான விசயம் என்னவென்றால் குர்ஆன், ஹதீஸ் என்று வாய்கிழியப் பேசுபவர்கள் தான…  இத்தகைய விட்டுக்கொடுக்கும் தன்மை சிறிதும் அற்றவர்களாக அதிகம் காணப்படுகின்றனர். இவர்கள் ஷைத்தானின் சூழ்ச்சிக்கு பலியாகி அவனின் மாயவலையில் விழுந்திருக்கிறார்கள். ஆயினும் மனிதர்களின் உள்ளங்களைப் புரட்டி நேர்வழிப்படுத்துபவனான வல்ல அல்லாஹ்வின்,
“நல்லுபதேசம் பயனளிக்குமாயின், நீர் உபதேசம் செய்வீராக” (87:9) மற்றும்
“நீர் நல்லுபதேசம் செய்வீராக! ஏனெனில், நிச்சயமாக நல்லுபதேசம் முஃமின்களுக்கு நற்பயனளிக்கும்” (51:55)
 போன்ற அறிவுரைகளுக்கேற்ப பகைமை உணர்வு, பலிவாங்கும் உணர்வு, பிரிவினைகளை ஏற்படுத்தும் செயல் ஆகிய அனைத்தையும் தவிடுபொடியாக்குகின்ற, இறைவனால் பெரிதும் விரும்பப்படுகின்ற பிறர் குறைகளை மன்னித்து விட்டுக்கொடுக்கும் தன்மையையும் அதன் அவசியத்தையும் பற்றிய இச்சிறிய நினைவூட்டலை பகிர்ந்துக் கொள்ள ஆசைப்படுகின்றேன்.
நபி (ஸல்) அவர்களால் வார்த்தெடுக்கப்பட்ட சத்திய சீலர்களான ஸஹாபா பெருமக்களின் பிறர் தவறுகளை மன்னிக்கும் தன்மையை நாம் உற்று நோக்கினால் ஆச்சரியப்படும் அளவிற்கான சிறந்த படிப்பினைகள் நமக்கு கிடைக்கின்றன.
ஆயிஷா (ரலி) அறிவித்தார்கள்: உஹுதுப் போரின் (தொடக்கத்தின்)போது இணைவைப்பாளர்கள் தோற்கடிக்கப்பட்டனர். அப்போது இப்லீஸ், அல்லாஹ் அவனைக் தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக! ‘அல்லாஹ்வின் அடியார்களே! உங்களுக்குப் பின்னால் இருப்பவர்களைக் கவனியுங்கள்” என்று கத்தினான். உடனே, முஸ்லிம்களில் முன் அணியினர் (எதிரிகள் என்றெண்ணி, பின் அணியினரை நோக்கித்) திரும்பிச் செல்ல, பின் அணியினருடன்  போரிட்டுக் கொண்டனர். அப்போது ஹுதைஃபா(ரலி), தம் தந்தை யமான் அவர்கள் அங்கே (முஸ்லிம்களின் தாக்குதலுக்கு ஆளாக) இருப்பதைக் கண்டார்கள். எனவே, ‘அல்லாஹ்வின் அடியார்களே! என் தந்தை! என் தந்தை!” என்று (உரக்கக்) கூவினார்கள். (ஆனால்) அல்லாஹ்வின் மீதாணையாக! அவரைக் கொன்ற பின்புதான் அவர்கள் (அவரைவிட்டும்) நகர்ந்தார்கள். அப்போது ஹுதைஃபா(ரலி) (தம் தந்தையைக் கொன்றவர்களை நோக்கி), ‘அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக!” என்று கூறினார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! ஹுதைஃபா(ரலி) (இவ்வாறு மன்னித்தால் அவர்கள்) அல்லாஹ்வைச் சந்திக்கும் வரை அவர்களிடம் நல்ல பலன் இருந்து கொண்டேயிருந்தது. (ஆதாரம் : புகாரி)
தம் தந்தையைக் கொன்றவர்களிடத்திலும் ஹுதைஃபா (ரலி) அவர்கள் காட்டிய பரிவு மேலும் அவர்களின் பாவம் மன்னிக்கப்படவேண்டும் என்று அவர்கள் செய்த துஆ! – இதிலிருந்து நாம் பெறவேண்டிய படிப்பினைகள் ஏராளம். உன்னைத் திட்டினால் நீ அவனைத் திட்டாதே!
 நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: – ‘எவரேனும் சரி உன்னிடமுள்ள குறைகளைச் சொல்லி உன்னைத் திட்டினால் நீ அவனுடைய குறைகளைச் சொல்லி திட்டாதே! காரணம் அந்த பாவம் அவனையே சாரும்’ ஆதாரம் : அபூதாவுத்.
நிந்தித்தவரையே சென்றடையும் நிந்தனை! “பிறர் தம்மைப் பற்றி சில செய்திகள் கூறிவிட்டார்; அவரை நான் பலிவாங்க வேண்டும்; அவரை நான் எவ்வாறு நோகடிக்கின்றேன் பார்” என்ற வெறியுடன் என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல் பலவாறாக பேசி விடுகிறோம். ஆனால் அது எவ்வளவு பயங்கரமானது? அதன் பின்விளைவுகள் என்ன என்பதைப் பற்றி சிறிது கூட நாம் கவலைப்படுவதில்லை.
நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: – “மற்றவரை ஒருவர் நிந்திக்கும் போது அது வானத்திற்குச் செல்கின்றது. அங்கே வானத்தின் கதவுகள் மூடி இருக்கின்றன. பின்பு அது உலகத்திற்கே திரும்புகிறது. உலகத்திலும் கதவுகள் மூடி இருக்கின்றன். பின்பு அது வலபுறம் இடபுறம் அலைந்து திரிகின்றது. எங்குமே அதற்கு இடமில்லாமல் அது – எவர் நிந்தித்தாரோ அவரிடமே வந்து சேருகிறது”. ஆதாரம் : அபூதாவுத்.
உண்மையான வீரன் யார்? நம்மிடம் வம்புக்கிழுப்பவர்களோடு மோதி அவர்களை வீழ்த்துவதான் வீரமல்ல! மாறாக அவர்களின் தவறுகளை மன்னிக்கும் தன்மையே சிறந்த வீரமாகும். ஏனென்றால் தம்மோடு வம்புக்கு வருபவரோடு மோதுவது என்பது பொதுவாக அனைவரின் செயலாகும். ஆனால் அவற்றை மன்னித்து ஏற்பதற்கு மிகுந்த தைரியம் வேண்டும். எனவே தான் நபி (ஸல்) அவர்கள் தம்மைக் கட்டுப்படுத்தி கோபத்தை அடக்கி கொள்பரை சிறப்பித்து பின்வருமாறு கூறுகிறார்கள்: -
 “மக்களைத் தன்னுடைய பலத்தால் அதிகமாக அடித்து வீழ்த்துபவன் வீரன் அல்லன்; உண்மையில் வீரன் என்பவன், கோபத்தின்போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவனே ஆவான்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா (ரலி) அறிவித்தார்.ஆதாரம் : புகாரி.
மூன்று இரவு, மூன்று பகல்களுக்கு மேல் பகைமை கொண்ட நிலையில் மரணிப்பவன் நரகம் புகுவான்! மேலும் சகோதர முஸ்லிம்களுக்கிமையில் மூன்று நாட்களுக்கு மேல் பகைமை கொண்ட நிலையிலேயே மரணிப்பவர் நரகம் புகுவார்கள் என்றும் நபி (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரித்திருக்கிறார்கள்.
 ‘தனது முஸ்லிம் சகோதரனுடன் மூன்று இரவு (பகலுக்கு மேல்) வெறுத்திருப்பது கூடாத செயலாகும். எனவே மூன்று இரவு (பகலுக்கு மேல்) வெறுத்திருக்கும் நிலையில் மரணிப்பவன் நரகம் நுழைவான்’ அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி), ஆதாரம் : அஹ்மது, அபூதாவுத்.
எனவே சகோதர சகோதரிகளே! சத்தியத் திருத்தூதரின் வாக்கை உண்மையென நம்பும் நாம் உடனடியாக நமது தவறுகளிலிருந்து விடுபட்டு சகோதர முஸ்லிம்களுடன் ஒற்றுமையாக வாழ முயற்சிக்க வேண்டும். சகோதர முஸ்லிம்களுடன் மூன்று நாட்களுக்கு மேல் நாம் பேசாமல் பகைத்து இருக்கக் கூடாது என்ற நபி (ஸல்) அவர்கள் இட்ட கட்டளையை அறிந்து உண்மையை நாம் உணர்ந்து கொண்ட போதிலும் ஷைத்தான் நம்மிடம் குறிக்கிட்டு அவர்கள் தானே முதலில் வம்புக்கிழுத்தார்கள்! எனவே அவர்கள் முதலில் பேசட்டும்; பிறகு நாம் பேசலாம் என்ற எண்ணத்தை தோற்றுவிப்பான். ஷைத்தானின் இந்த மாயவலையில் நாம் சிக்கிவிடாமல் அல்லாஹ்விடம் பாதுகாப்பு கோரியவர்களாக நாம் பெருந்தண்மையுடன் அவர்கள் நமக்கு செய்த தீமைகளை மன்னித்து மறந்து விட்டு நாம் முதலில் பேச ஆரம்பிப்போமேயானால் அல்லாஹ் நம்முடைய பாவங்களை மன்னித்து அதற்காக நமக்கு நிறைய வெகுமதிகளை தருவான். இவ்வாறு பிணக்கிற்குப் பிறகு முதலில் பேசுபவர்களைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் சிறப்பித்துக் கூறிய ஹதீஸ் ஸஹீஹூல் புகாரியில் வந்திருக்கிறது.
 “ஒருவர் தம் சகோதரரிடம் (மனஸ்தாபம் கொண்டு) மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று. அவர்கள் இருவரும் சந்தித்து ஒருவரைவிட்டு ஒருவர் முகத்தைத் திருப்பிக்கொள்வர். (இவ்வாறு செய்யலாகாது.) ஸலாமை முதலில் தொடங்குகிறவர்தாம் இவர்கள் இருவரில் சிறந்தவராவார்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் :அபூ அய்யூப் அல்அன்சாரி (ரலி), ஆதாரம் : புகாரி.
பகைவரும் உற்ற நன்பர் போல் ஆகவேண்டுமா? நம்மில் சிலர், நான் ஒன்றுமே செய்யவில்லை! தவறுகள் முழுவதும் மற்றவருடையது தான். அவராகத் தான் என்னிடம் வம்புகள் செய்து பிரிந்துவிட்டார். நான் என்ன செய்வது? என்று கேட்கின்றனர். மேலும், இப்போது கூட நான் அவர்களைப் பற்றி ஒன்றுமே கூறுவதில்லை! ஆனால் அவர்களோ என்னைப் பற்றி அநியாயத்திற்கும் இல்லாததையும் பொல்லாததையும் பிறரிடம் கூறி என்னை மனவருத்தத்திற்குள்ளாகின்றனர் என்றும் கூறி மன வருத்தமடைகின்றனர். இவர்களுக்கான அழகிய தீர்வை நம்மையும் அவதூறு கூறும் அவர்களையும் படைத்தவனும் நம் அனைவரது உள்ளங்களைப் புரட்டக் கூடியவனாகிய அல்லாஹ் கூறுகிறான்: -
“நன்மையும் தீமையும் சமமாக மாட்டா, நீங்கள் (தீமையை) நன்மையைக் கொண்டே தடுத்துக் கொள்வீராக! அப்பொழுது, யாருக்கும் உமக்கிடையே, பகைமை இருந்ததோ, அவர் உற்ற நண்பரே போல் ஆகிவிடுவார். பொறுமையாக இருந்தார்களே அவர்கள் தவிர வேறு யாரும் அதை அடைய மாட்டார்கள்; மேலும், மகத்தான நற்பாக்கியம் உடையவர்கள் தவிர, வேறு யாரும் அதை அடைய மாட்டார்கள்” (அல்-குர்ஆன் 41:34-35)
அல்லாஹ் கூறுகின்றான்: “அவர்கள் எத்தகையோரென்றால் செல்வ நிலைமையிலும் வறுமை நிலைமையிலும் தானம் செய்துகொண்டேயிருப்பார்கள். கோபத்தை விழுங்கி விடுவார்கள். மனிதர்களை மன்னித்து விடுவார்கள். அல்லாஹ் இத்தகைய நல்லோரையே நேசிக்கிறான்“. (அல்குர்ஆன் 3:134)
வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் பிறர் குறைகளை மன்னிக்கும் தன்மையை அளித்து அதன் மூலம் நம் குறைகளை அவன் மன்னித்தருள்வானாகவும்.
கடலூர் சகோதர்கள்

www.readislam.net

உறவினரை இணைத்து வாழ்வீர்

ஒருவர் தம் உணவு (வாழ்வாதாரம்) தமக்கு அதிகரிக்கப்படவும், தம் ஆயுள் தமக்கு நீட்டிக்கப்படவும் விரும்பினால் அவர் தம் உறவினரை இணைத்து வாழட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), நூற்கள்: புகாரீ, முஸ்லிம்
நிச்சயமாக அல்லாஹ், படைப்புகளைப் படைத்து முடித்தபோது `உறவு எழுந்து நின்றது. (என்னைத்) துண்டித்துக் கொள்வதைவிட்டு உன்னிடம் பாதுகாப்புக் கோரும் இடம் இது என்று கூறியது. ஆம் உன்னைச் சேர்த்துக்கொள்பவனை நானும் சேர்ப்பேன். உன்னைத் துண்டிப்பவனை நானும் துண்டிப்பேன் என்பதை நீ திருப்தியுறவில்லையா? என்று அல்லாஹ் கேட்டான். திருப்திதான் என உறவு கூறியதும், உனக்கு அது உண்டு என்று அல்லாஹ் கூறினான் என நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு, பின்பு, நீங்கள் விரும்பினால் (பின்வரும்) இறைவசனத்தை ஓதுங்கள் என்றும் கூறினார்கள்.
நீங்கள் பொறுப்பாளர்களாக வந்துவிட்டால் பூமியில் நீங்கள் குழப்பம் செய்திடவும், உங்களின் இரத்தத் தொடர்புடையவர்களை நீங்கள் துண்டித்துக் கொள்ளவும் விரும்புகிறீர்களா? (துண்டிக்கும்) அவர்களை அல்லாஹ் சபித்துவிட்டான். அவர்களைச் செவிடாக்கிவிட்டான். அவர்களின் பார்வைகளைக் குருடாக்கி விட்டான். (47: 22-23) அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூற்கள்: புகாரீ, முஸ்லிம்
உறவு என்பது, அர்ஷைப் பிடித்துக்கொண்டு, என்னை இணைத்து வாழ்பவரை அல்லாஹ் இணைத்துக்கொள்வான். என்னைப் பிரித்துவிடுபவரை அல்லாஹ்வும் பிரித்துவிடுவான் என்று கூறும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அன்னை ஆயிஷா (ரலி), நூற்கள்: புகாரீ, முஸ்லிம்
பிரதி உபகாரம் (உதவிக்கு உதவி) என வாழ்பவர், உறவை இணைத்து வாழ்பவர் அல்லர். எனினும் தன் உறவினர் தம்மைத் துண்டித்தாலும், இணைத்து வாழ்பவரே உறவை இணைத்து வாழ்பவர் ஆவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னு ஆஸ் (ரலி), நூல்: புகாரீ
நபி (ஸல்) அவர்களிடம், இறைத்தூதர் அவர்களே! சொர்க்கத்தில் என்னை நுழையச் செய்கின்ற, நரகத்திலிருந்து என்னைத் தூரமாக்கிவிடுகின்ற ஒரு செயலை என்னிடம் கூறுங்கள் என்று ஒருவர் கேட்டார். நீர் அல்லாஹ்வை வணங்குவீர்; எதையும் அவனுக்கு இணையாக்காதீர்; தொழுகையைப் பேணுவீர்; ஸகாத்தைக் கொடுப்பீர்; உறவினரை இணைத்து வாழ்வீர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: காலித் இப்னு ஸைத் அல்அன்ஸாரீ (ரலி), நூற்கள்: புகாரீ, முஸ்லிம்
உங்களுள் ஒருவர் நோன்பு துறந்தால், ஒரு பேரீத்தம் பழத்தால் நோன்பைத் துறக்கட்டும். அதுவே அபிவிருத்தி தரும். ஒரு பேரீத்தம் பழம் இல்லையென்றால், தண்ணீர் (மூலம் நோன்பு துறக்கட்டும்); அதுவே சுகாதாரமாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு, ஏழைக்குத் தர்மம் தருவது, ஒரு தர்ம(க் கூலி)தான். உறவினருக்குத் தர்மம் வழங்குவது இரண்டு (கூலி)களாகும். ஒன்று தர்மம்; மற்றொன்று உறவை இணைத்து வாழ்தல் என்றும் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: சல்மான் இப்னு ஆமிர் (ரலி), நூல்: திர்மிதீ
தொகுப்பு:
Mohamed Faizal


www.readislam.net

Tuesday, July 26, 2011

மனித மாண்பு காக்கும் புனித நோன்பு!

எழுதியவர்/பதிந்தவர்/உரை
 

புனித ரமழான் எம்மை நோக்கி வந்துகொண்டிருக்கின்றது. அருள் மறையாம் திருமறைக் குர்ஆன் அருளப்பட்ட இப்புனித மாதத்தில் மனிதம் சிறப்புப் பெற நோன்பிருக்க வேண்டுமென்பது அல்லாஹ்வின் கட்டளையாகும். “நோன்பு” என்பது அல்லாஹ்வின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு உண்ணுதல், பருகுதல், உடலுறவில் ஈடுபடுதல் போன்ற செயல்களை அதிகாலை முதல் மாலை வரை தவிர்த்திருக்கும் ஒரு பயிற்சியாகும்.
நோன்பு மனிதனின் நடத்தைகளைச் சீராக்கி அவனிடம் உருவாகும் மிருக உணர்வுகளை அழித்து மனித மாண்புகளைக் காக்கின்றது.
“நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (அல்லாஹ்வை) அஞ்சி நடப்பதற்காக உங்களுக்கு முன்பிருந்தோர் மீது விதியாக்கப்பட்டது போன்று உங்கள் மீதும் நோன்பு விதியாக்கப்பட்டுள்ளது.” (2:183)
மேற்படி வசனம், “நோன்பு” என்பது பக்குவத்தை வளர்க்கும் பயிற்சி என்கின்றது. இன்று உலகை உலுக்கி வரும் அநேக பிரச்சினைகளுக்கு நோன்பு ஒரு தீர்வாக இருப்பதை நுணுக்கமாக ஆராய்ந்தால் அறிய முடியும். மனிதனிடமிருக்கும் சில உணர்வுகள் முறையாக நெறிப்படுத்தப்பட வேண்டும்; கட்டுப்படுத்தப்பட வேண்டும். தவறும் பட்சத்தில் பாரதூரமான விளைவுகளை உலகம் எதிர்நோக்க வேண்டிவரும் என்பது கண்கூடு.
-1- உடல் இச்சை.
-2- கோபம்.
-3- தவறான உணவு முறை.
-4- தவறான பேச்சு.
இவை இன்றைய உலகை உலுக்கி வரும் ஆபத்து நிறைந்த அம்சங்களாகும்.
மனிதனிடம் இயல்பிலேயே பாலியல் உணர்வு இருக்கின்றது. உலக இருப்புக்கும், உயிரினங்களின் பரவலுக்கும் பாலியல் உணர்வு அவசியமானதாகும். எனினும், இந்த உணர்வு நெறிப்படுத்தப்பட வேண்டும்; கட்டுப்படுத்தப்பட வேண்டும். தவறான முறையில் இந்த உணர்வுகள் தீர்த்துக்கொள்ளப்படக் கூடாது.
இன்று உலகில் நடக்கும் கொலைகளில் அதிகமானவை பாலியலை அடிப்படையாகக் கொண்டவையாகும். பெற்ற பிள்ளை, வளர்த்த பெற்றோர், உறவினரென எவரையும் கொல்லத் தயங்காத குணம் இந்தப் பாலியலுக்குள்ளது. இந்த உணர்வைக் கட்டுப்படுத்தத் தெரியாத சமூகங்களில் தந்தை பெயர் தெரியாத பிள்ளைகள் அதிகரித்து வருகின்றன.
உலகம் சந்தித்து வரும் பயங்கரமான பாலியல் நோய்களைத் தீர்த்துக்கொள்ள முடியாமல் அரசுகள் திண்டாடி வருகின்றன.
நோன்பு நோற்கும் ஒருவன் தனது மனைவியுடன் கூட உடலுறவைத் தவிர்த்துத் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்கின்றான். நோன்பு பாலியல் உணர்வை நெறிப்படுத்தும் என்பதாலேயே இது சாத்தியமாகின்றது.
இளைஞர்களே!
“திருமணம் புரியும் வாய்ப்பிருந்தால் திருமணம் முடியுங்கள்! அது பார்வையைத் தாழ்த்தும்; கற்பைக் காக்கும். அதற்கு முடியாதவர்கள் நோன்பிருங்கள்! அது அவருக்குக் கேடயமாக இருக்கும்!” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(முஸ்லிம், திர்மிதி, நஸாஈ)
இன்று மனிதன் இயந்திரமயமாகி மனிதத் தன்மையை இழந்து வருகின்றான். கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாதவனாக மாறி வருகின்றான். கணவன் மீது மனைவி கோபங்கொண்டதால் உறங்கும் போது அம்மிக்கல்லைத் தலையில் போட்டுக் கொல்கிறாள்; மண்ணெண்ணையை ஊற்றி எரிக்கின்றாள்; பக்கத்து வீட்டுக்காரனின் நாய் குரைத்துத் தூக்கத்தைக் கெடுத்ததற்காகப் பக்கத்து வீட்டானைத் துப்பாக்கியால் சுட்டுக் கொல்கின்றான்; தொடர்ந்து பிள்ளை அழுது அடம்பிடித்ததற்காகப் பிள்ளையைத் தூக்கிச் சுவறில் அடித்துப் பெற்றோரே கொலை செய்கின்றனர்; இரு சகோதரர்கள் மல-சல கூடத்திற்கு முதலில் யார் போவது என்ற பிரச்சினையில் ஒருவர் மற்றவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்கின்றான். இப்படி எண்ணற்ற செய்திகளை அன்றாடம் பார்த்து வருகின்றோம்.
நோன்பு மனிதனது கோப உணர்வைக் கட்டுப்படுத்தப் பழக்குகின்றது. நீ நோன்புடனிருக்கும் போது உன்னுடன் ஒருவன் சண்டையிட முற்பட்டால் “நான் நோன்பாளி!” எனக் கூறி ஒதுங்கி விடு என இஸ்லாம் கூறுகின்றது. கோப உணர்வை ஒருவன் கட்டுப்படுத்திப் பழக்கப்பட்டால் பல ஆபத்துகளிலிருந்து விடுதலை பெற்று விடலாம்.
உலக நாடுகளும், அரச தலைவர்களும் கோபத்தைக் கட்டுப்படுத்தப் பழகி விட்டால் உலகை அழிவிலிருந்து பாதுகாக்கலாம்.
மனிதன் “பேசும் மிருகம்” என்பர். மனிதன் மிருகம் போன்று பகுத்தறிவைப் பயன்படுத்தாமல் பேசும் போது விளையும் விபரீதங்கள் அதிகமாகும். பேச்சில் “பொய்” என்பது பிரதான பாவமாகும். அமெரிக்காவும், பிரிட்டனும் ஈராக்கில் பயங்கர ஆயுதம் இருப்பதாகக் கூறிய ஒரு பொய் 6 இலட்சம் சிறுவர்களைப் பலி கொண்டுள்ளதென்றால் பொய்யின் விபரீதத்தையுணர வேறு ஆதாரம் தேவையில்லை. இதே போன்று அவதூறு, பொய்ச் சாட்சி, புறம் என எண்ணற்ற தவறுகள் பேச்சால் ஏற்படுகின்றன.
நோன்பு பேச்சில் கட்டுப்பாட்டைப் பேணும் பக்குவத்தைத் தருகின்றது
“பொய் பேசுவதையும், அதனடிப்படையில் செயற்படுவதையும் யார் விட்டு விடவில்லையோ, அவர் தனது உணவையும், பானத்தையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை!” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, அபூதாவூத், திர்மிதி) என்ற நபிமொழிகள் இதைத்தான் உணர்த்துகின்றன.
அடுத்து, தவறான உணவு முறை என்பது இன்று உலகம் தழுவிய பிரச்சினையாக மாறியுள்ளது. இந்தத் தவறால் குண்டுப் பிள்ளைகளின் தொகை ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்து வருகின்றது. ஒவ்வொரு நாடும் கொழுப்பைக் கரைப்பதற்கே பல கோடி டொலர்களைக் கொட்டித் தொலைக்கின்றன.
மனிதன் வாயைக் கட்டுப்படுத்தத் தெரியாததனாலும், அவனது தவறான உணவு முறையாலும் உலக நாடுகள் பல சவால்களை எதிர்கொண்டு வருகின்றன. நோன்பு மனிதனுக்கு இந்தப் பிரச்சினையிலிருந்து விடுபடப் பயிற்சியளிக்கின்றது.
நோன்பு முறையாக அனுஷ்டிக்கப்பட்டால் எண்ணற்ற உலக நலன்களை நாம் அடையலாம். நோன்பு முஸ்லிம்களால் சரியான முறையில் அனுஷ்டிக்கப்பட்டால் அதுவே அந்நியரைப் பெருமளவில் இஸ்லாத்தின் பால் ஈர்க்கும் அம்சமாக மாறி விடும். ஆனால், புனித நோன்பை அனுஷ்டிக்கும் வழிமுறை மாற்று மதத்தவர் மத்தியில் நோன்பு பற்றியும், ரமழான் பற்றியும் தவறான எண்ணங்களை ஏற்படுத்தி வருவது துரதிஷ்டமானதாகும்.
இலங்கை அரசு பிச்சைக்காரர் ஒழிப்புக்குக் கூடுதல் முக்கியத்துவமளிக்கின்றது. “பிச்சைக்காரர்கள்” என்ற பெயரில் உலாவுவோரில் 99 வீதமானோர் குற்றவாளிகளாவர். பொய், மோசடி, ஏமாற்று, திருட்டு, போதை, விபசாரம் போன்ற குற்றச் செயல்களிலீடுபடும் இவர்கள், பிச்சைப் பணத்தைத் தவறாகப் பயன்படுத்துகின்றனர்.
(உண்மையாகவே சமூகப் பராமரிப்பில் வாழ வேண்டியவர்கள் உள்ளனர். அவர்கள் குறித்து அரசும், சமூகமும் அக்கறை செலுத்த வேண்டும் என்பது தனி விடயம்.)
சில பிச்சைக்காரர்கள் குழந்தைகளைத் தூக்கிக்கொண்டே பிச்சையெடுப்பர். பார்ப்போர் மனதை நெகிழச் செய்யக் குழந்தைகள் பெரிதும் உதவுவர். இவர்கள் சுமந்து வரும் குழந்தைகள் எந்தப் பிரச்சினையுமில்லாமல் தூங்கிக்கொண்டே இருப்பர். பொதுவாகக் குழந்தைகள் தொடர்ந்து தூக்கிக்கொண்டிருந்தால் இறங்கி விளையாட அடம்பிடிப்பர். இவர்கள் சுமந்திருக்கும் குழந்தைகள் மட்டும் எப்படி ஒன்றும் செய்யாமல் அப்படியே இருக்கின்றனர்? என ஆராய்ந்த போது குழந்தைகளுக்குப் போதை அல்லது தூக்க மருந்து கொடுக்கும் கொடூரம் தெரிய வந்தது. இவர்கள் சில போது சிறுவர்களின் கை-கால்களை உடைத்து ஊனப்படுத்துவதுமுண்டு! இந்த வகையில், “பிச்சைக்காரர் ஒழிப்பு” என்பது வரவேற்கத் தக்க அம்சமே!
அண்மையில் கொழும்பில் சில பிச்சைக்காரர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். இவர்களிடமிருக்கும் பணத்தைக் கொள்ளையிடுவதற்காக இப்படி நடந்திருக்கலாம் என்று கூறப்படுகின்றது. அதே வேளை, பிச்சைக்காரர் போன்று புலிகள் உலாவுகின்றனர் என்ற கருத்தை அண்மையில் அரசு வெளியிட்டதையும், “பிச்சைக்காரர் ஒழிப்பு” நடவடிக்கையில் அரசு தீவிரங்காட்டியதையும் இணைத்து இக்கொலைகளுக்குப் பின்னணியில் அரசியல் இருப்பதாகவும் கூறப்படுகின்றது. எது எப்படியோ, நோன்பு காலத்தில் ‘ஃபித்றா”வின் பெயரில் எமது சகோதரர்கள் நகர்ப் புறங்களுக்குப் படையெடுப்பதுண்டு! இதனால், ரமழான் என்றால் பிச்சையெடுக்கும் மாதம்! என்ற தவறான கருத்து மாற்று மதத்தவர் மத்தியில் உருவாகியுள்ளது.
எனவே, முதலில் இந்தப் பிச்சையெடுக்கும் படலத்தை நிறுத்த வேண்டும். எமது பெண்கள் கன்னிப் பெண்களையும் அழைத்துக்கொண்டு கொழும்பு-கண்டி வீதியில் உறங்குவர். இது ஆபத்தானது. எனவே, ஃபித்றாவின் பெயரில் பிச்சையெடுக்க ஊர்-ஊராகச் செல்வதைத் தடுக்க மஸ்ஜித் நிர்வாகங்கள் நடவடிக்கையெடுக்க வேண்டும். அத்துடன் ஸகாத், ஸதகா, ஸகாதுல் ஃபித்றா போன்றவற்றைத் திட்டமிட்டுத் திரட்டிப் பிச்சையெடுப்பதைத் தடுக்கும் செயற்திட்டங்களையும் வறியவர் நலன் காக்கும் செயற்திட்டங்களையும் முன்னெடுக்க வேண்டும்.
அடுத்து, வழமையாக நோன்பு காலங்களில் எமது இளைஞர்கள், பாதைகளை மைதானமாகப் பயன்படுத்தி விளையாடியும், இரவு பூராகச் சப்தமிட்டு விளையாடி அடுத்தவர்களுக்குத் தொல்லை கொடுத்தும் வருகின்றனர். மற்றும் சிலர் பிறரது தோட்டங்களில் மாங்காய்-தேங்காய் பறிப்பது, வீட்டுக்குக் கல்லடிப்பது, பள்ளிக்குச் செல்லும் பெண்களுக்குக் கிண்டல் பண்ணுவதென்று காலத்தைக் கழிப்பர். இதுவும் நோன்பு குறித்த தப்பெண்ணத்தை அந்நியரிடம் ஏற்படுத்தியுள்ளது. இதைத் தவிர்ப்பது அவசியமாகும். அத்துடன் சாதாரண ஒரு பிரச்சினை கூட சமூகப் பிரச்சினையாக மாறும் அபாயம் உள்ளது. எமது அமல்கள் கூட அடுத்தவர்களுக்குப் பாதிப்பை உண்டாக்காததாக இருக்க வேண்டும். தறாவீஹ் தொழுகை போன்றவற்றை ஒலிபெருக்கியில் தொழுவிப்பதைக் கூடத் தவிர்க்க வேண்டும். இனத் துவேஷம் தூண்டப்படாதவாறு எமது செயற்பாடுகள் அமைய வேண்டுமென்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
அடுத்துப் பொதுவாக நோன்பு காலங்களில்தான் அதிகமான மார்க்கக் கருத்து வேறுபாடுகள் தோன்றுகின்றன. அடுத்து, மார்க்கத்துடன் சம்பந்தமற்ற பலரும் ரமழானில்தான் பள்ளியுடன் சம்பந்தம் வைத்துக்கொள்கின்றனர். இதனால் சாதாரண மார்க்கக் கருத்து வேறுபாடுகள் சண்டைகளாக உருப்பெறுகின்றன.
மார்க்கக் கருத்து வேறுபாடுகள் குர்ஆன்-ஸுன்னாவின் அடிப்படையில் தீர்த்துக்கொள்ளப்பட வேண்டும். அதற்கு வழியில்லை என்றால் குறைந்த பட்சம் சண்டை-சச்சரவிலீடுபடாது நிதானமாகச் செயற்படவாவது முன்வர வேண்டும். ஆனால், இந்த நிலைக்கு மாற்றமாக, “நான் நினைப்பது போன்றுதான் நீ நடக்க வேண்டும்!” என்ற அடிப்படையில் சிலர் செயற்படுகின்றனர். மற்றும் சிலர் இயக்க வெறியுடன் செயற்படுகின்றனர். அதனால் மார்க்க நிகழ்ச்சிகளைத் தடை செய்கின்றனர். இந்த ஜமாஅத்துக்கு இங்கே இடமில்லை! என்ற தோரனையில் செயற்படுகின்றனர்.
மஸ்ஜிதில் இடமில்லாத போது வீடுகளில் நிகழ்ச்சிகள் செய்ய முற்பட்டால் அதைக் கூடத் தடுக்கின்றனர். இது போன்ற செயல்களால் சண்டைகள் அதிகரித்துப் பொலிஸ் தலையிடும் நிலையேற்படுகின்றது. பள்ளி நிர்வாகங்களுக் கெதிராக வழக்குகளும் தொடுக்கப்படுகின்றன.
ரமழான் மாதம்” என்றால் முஸ்லிம்கள் பள்ளிக்குள் சண்டை பிடிக்கும் மாதம் என்ற கருத்தைக் காவல் துறையினர் மத்தியில் ஏற்படுத்தும் வண்ணம் எமது செயற்பாடுகள் அமைவது வருந்தத் தக்கதாகும். அத்துடன் அவர்கள் முஸ்லிம்களிடம் கேட்கும் சில கேள்விகள் இஸ்லாத்தைப் பற்றியும், முஸ்லிம்கள் பற்றியும் அவர்கள் மனதில் தோன்றும் கெட்ட எண்ணத்தைத் தெளிவுபடுத்துகின்றது.
எனவே, நோன்பு காலத்தைச் சண்டைக்கும், சச்சரவுக்கும் செலவழிக்காமல் இபாதத்திற்கும், பக்குவத்தை ஏற்படுத்துவதற்கும் பயன்படுத்த அனைவரும் உறுதியான தீர்மானத்தையெடுக்க வேண்டும். நோன்பை உரிய முறையில் நோற்று அதையே இஸ்லாத்தின் பால் அழைக்கும் சிறந்த தஃவாவாக அமைத்துக்கொள்ள முயல வேண்டும்.
எனவே, எதிர்வரும் ரமழானைத் தூய முறையில் கழிக்க தூய்மையான எண்ணத்துடன் உறுதி பூண்டு செயற்படுவோமாக!

www.islamkalvi.com

Friday, July 8, 2011

அல்குர்ஆன் தோற்றுவித்த சமுதாயம்

எழுதியவர்/பதிந்தவர்/உரை மௌலவி M.S.M. இம்தியாஸ் ஸலஃபி
- உஸ்தாத் இம்தியாஸ் ஸலபி
“அல்லாஹ் உங்கள் மீது புரிந்த அருளை நினைத்துப் பாருங்கள்.நீங்கள் (ஒருவருக்கொருவர்) விரோதிகளாக இருந்த சமயத்தில் அவன் உங்கள் இதயங்களுக்கிடையே அன்புப்பிணைப்பை உண்டாக்கினான். ஆகவே அவனுடைய பேரருளால் நீங்கள் சகோதரர்களாகி விட்டீர்கள்.(அதற்கு முன்பு) நீங்கள் நரக நெருப்பு குழியின் விளிம்பின் மீதிருந்தீர்கள். அதிலிருந்தும அவன் உங்களை காப்பாற்றினான். நீங்கள் நேர்வழி பெறுவதற்காக அல்லாஹ் தன் வசனங்களை உங்களுக்கு இவ்வாறு தெளிவுபடுத்துகிறான்.(3:102)
மனித சமூகத்தில் மிக மோசமானவர்களாக நடமாடிய ஒரு சமூகத்தை நேர்வழியின் கொண்டு வந்தது பற்றி அல்குர்ஆன் இங்கே பிரஸ்தாபிக்கிறது.
படுபாதகத்தில் வாழ்ந்த வாழ்விலிருந்து காப்பாற்றியதை நினைவூட்டி நேர்வழியில் தொடர்ந்திருப்பதன் அவசியத்தையும் வலியுறுத்துகிறது அல்குர்ஆன்.
யார் அந்த சமூகம்?
நாளா பக்கங்களிலும் பாராங்கற்களினால் சூழப்பட்ட பகுதிகளில் வாழ்ந்தவர்கள்!
தோற்றத்தில் மனிதர்களாகவும் செயற்பாட்டில் அசிங்கமாகவும்; இயங்கியவர்கள்!
கற்பாரைகளைப் போன்றே உள்ளங்களும் கடுமையாகவே இருந்தன!
வரலாறு அவர்களை ஜாஹிலியா சமூகம் என்று அழைக்கிறது!
அந்த சமூகத்தினர் அல்குர்ஆன் மூலம் அடைந்த மாற்றங்கள் மற்றும் உயர்நிலைகள் வரலாற்றில் எந்த சமூகமும் பெற்றதில்லை.
அந்த சமூக மாற்றத்தில் அல்குர்ஆன் செய்த புரட்சி பசுமையானது. இனிமை சேர்க்கும் அந்த வரலாற்றின் ஒரு சில பக்கங்களை கொஞ்சம் கவனியுங்கள்.
கல்லையும் மண்ணையும் வணங்கி பூஜித்து அறியாமையில் மூழ்கிக் கிடந்து மூடர்களாகவும் முரடர்களாகவும் கல்நெஞ்சம் படைத்தவர்களாகவும் வாழ்ந்த அந்த மக்கள் அல்குர்ஆனை கேட்டு மனமுறுகினார்கள். கண்ணீர்வடித்தார்கள். ஒரே ஆண்டவனாகிய அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு முன் மன்டியிட்டார்கள். மனிதர்களாகவும் புனிதர்களாகவும் மாற்றியமைப்பதில் அல்குர்ஆன் தனியான பங்கை வகிக்கின்றது என்பதை உறுதியாக நம்பி செயற்பட்டார்கள்;. அல்குர்ஆனின் ஒவ்வொரு வசனங்களுக்கேற்ப தங்களை மாற்றிக் கொண்டார்கள். தங்கள் வீட்டையும் சூழலையும் குர்ஆனிய மத்ரஸாவாக மாற்றிக் கொண்டார்கள். இதென்ன சாதாரண மாற்றமா?
அகம்பாவம் ஆணவம் மற்றும் அரக்கத்தனத்துடன் ஆடித்திரிந்தவர்களை அன்பாளர்களாக பண்பாளர்களாக உருவாக்கியது அல்குர்ஆன்.
பலவீனர்களை அடக்கி ஆண்டு உரிமைகளை பறித்தெடுத்து அட்டகாசம் புரிந்த சண்டாளர்களை ஆண்டவனாகிய அல்லாஹ்வின் வார்த்தைகளுக்கு முன் சரணடையச் செய்து உரிமைகளுக்கு உத்தரவாதமளிக்கும் உத்தமர்களாக மாற்றியது அல்குர்ஆன்.
சுகபோக வாழ்க்கையில் சுழன்று உலக மோகத்தில் மூழ்கி குறிக்கோளின்றி சென்றவர்களை இப்பூமியில் அல்லாஹ்வின் தீனை நிலைநாட்டும் இலட்சிய புருஷர்களாக தியாக செம்மல்களாக உருவாக்கியது அல்குர்ஆன்.
ஷைத்தானின் சுலோகங்களில் கட்டுண்டு காட்டுத் தர்பார் புரிந்தவர்களை காடேரிகளாக வாழ்ந்தவர்களை நாடாளும் மன்னர்களாக நம்பிக்கைவான்களாக உருவாக்கியது அல்குர்ஆன்.
சடவாத சிந்தனைக்குள் சிக்குண்டு நாஸ்தீக பட்டறைக்குள் பதுங்கியிருந்தவர்களை ஒரே ஒரு கடவுளாகிய அல்லாஹ்வின் வல்லமைகளை எடுத்தோதும் பகுத்தறிவாளர்களாக அழைப்பாளர்களாக நடமாடச் செய்தது அல்குர்ஆன்.
உயிர் உடலை விட்டு பிரிந்து மண்ணறைக்குள் மறைந்ததன் பின்னால் எல்லாம் முடிந்துவிட்டது என்ற மமதையில் ஓடித் திரிந்தவர்களை மறுமை நாளின் சிந்தனையுடையவர்களாக மனித விவகாரங்களுக்குப் பொறுப்புள்ளவர்களாக வாழச் செய்தது அல்குர்ஆன்.
குலபேதம், நிறபேதம், மொழிபேதம், பிரதேச வாதம், பேசி இனவெறிப் போராட்டத்தில் ஈடுபட்டு பிரிந்து கிடந்தவர்களை சகோதர நேசர்களாக சமாதானத்தின் தூதுவர்களாக காட்சியளிக்கச் செய்தது அல்குர்ஆன்.
உயர்வு தாழ்வு பேசி உயிர்களை மாய்த்துக் கொண்டு பல காலம் பலி பீடத்தில் பயணித்தவர்களை ‘தக்வா எனும் இறையச்சமுடையவர்களே அல்லாஹ்விடத்தில் உயர்ந்தவர்கள் என்ற கொள்கையில் உறுதியுள்ளவர்களாக பாசபிணைப்புள்ளவர்களாக உருவாக்கியது அல்குர்ஆன்.
மதுவிலும் மங்கையர்களிலும் மயங்கி பாவங்களில் குதூகலித்து அநாகரீகமாக ஆடிக் கொண்டிருந்தவர்களை ஒழுக்கச் சீPலர்களாக நாகரீகத்தின் காவலர்களாக மாற்றியது அல்குர்ஆன்.
பொதுவுடமை பேசி பொதுமக்களின் சொத்துக்களை சூரையாடி நிலமானியம் பேசி நிலங்களை கொள்ளையடித்து அரசியல் பேசி அராஜகம் பண்ணி அரசாண்டவர்களை நீதியாளர்களாக உலகம் போற்றும் நீதிமான்களாக உயர்த்திக் காட்டியது அல்குர்ஆன்.
பெண் குழந்தைகளை இழிவாகக் கருதி உயிருடன் புதைத்து பெண்களின் உரிமைகளைஉரித்தெடுத்து உல்லாசபுரி வாழ்க்கையில் திளைத்திருந்தவர்களை நற்பண்புகளுக்கு நற்சய்தி சொல்லக் கூடியவர்களாக மாற்றியது அல் குர்ஆன்.
ஆணுக்கும் பெண்ணுக்கும்
அர்த்தமுள்ள சம அந்தஸ்துகளை வழங்கி
உரிமைகளை, கடமைகளை பகிர்ந்து கொடுத்து
தனிமனித குடும்ப சமூக வாழ்க்கையை பண்படுத்தி ஒழுக்க விழுமியங்களுடன் வாழச் செய்தது அல் குர்ஆன்.
நரகத்தின் படுகுழியில் பக்கத்தில் இருந்தவர்களை சுவனத்துப் பூங்காவில் நிழல் பெறும் சமூகமாக மாற்றிக் காட்டியது அல் குர்ஆன்
இருண்ட உள்ளங்கள் அல்லாஹ்வின் ஒளி பொருந்திய வசனங்களை கேட்டு சிரம்பனியச்செய்தது அல் குர்ஆன்.
உலக மக்கள் தங்களுடைய விடிவுக்காகவும் விடுதலைக்காகவும் சுதந்திரத்திற்காகவும் இவர்களை தேடி தூது அனுப்பக் கூடியதாக எடுத்துக் காட்டியது அல்குர்ஆன்.
ஒரு காலத்தில் உலக மக்கள் இவர்களை கண்டு அஞ்சினார்கள். ஒதுங்கி நின்றார்கள். குறுகிய காலத்தில் அவர்களை கண்டு அரவணைக்கவும் ஆதரவு தேடவும் புறப்பட்டார்கள்.
நாகரீகத்தையும் அறிவியலையும் ஒழுக்கவிழுமியங்களையும் இவர்களிடமிருந்தே உலகம் கற்றுக் கொண்டது. இந்த மாபெரும் அதிசயத்தை ஆற்றிய பெருமை மாமறை அல்குர்ஆனுக்கே உண்டு. மனித சமூகத்தில் தனிப் பெரும் செல்வாக்கை செலுத்தக் கூடியதாக முத்திரை பதித்து அல்குர்ஆன்.
நபி (ஸல்) அவர்கள் 23 வருட காலங்களில் குர்ஆனிய போதனைகளின் அடிப்படையில் தோற்றுவித்த சமுதாயம் இது. இவர்களை “சஹாபாக்கள்” என்று சரித்திரம் இன்று சான்று பகிர்கின்றது.
“அல்லாஹ்வும் அவர்களை பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வை பொருந்தி கொண்டார்கள்”.(அல்குர்ஆன் 98:8)
அதே அல்குர்ஆன் இன்றும் எங்களுக்கு மத்தியில் இருக்கிறது. ஆனாலும் எந்த மாறுதல்களும் எங்களுக்குள் உருவாக வில்லை என்றால் அது குர்ஆனின் கோளாறு அல்ல. எங்களது கோளாறு.
அல்குர்ஆனை முறையாக ஓதுவதில்லை, படிப்பதில்லை, விளங்குவதில்லை, பின் பற்றுவதில்லை என்றால் என்ன மாற்றம் வந்துவிடப் போகிறது?

www.islamkalvi.com

பைபிளில் நபித்தோழர்கள் – அல்குர்ஆன் விளக்கவுரை

எழுதியவர்/பதிந்தவர்/உரை மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி
அல்குர்ஆன் அற்புத இறை வேதமாகும். அதில் பல்வேறுபட்ட முன்னறிவிப்புகள் நிறைந்து காணப்படுகின்றன. அத்தகைய முன்னறிவிப்புகளில் விஞ்ஞான உண்மைகள், வரலாற்று உண்மைகள், தொல்பொருள் ஆய்வுகள் பற்றிய முன்னறிவிப்புகள் என்பன உள்ளடங்குகின்றன. அவ்வாறே முன்னைய வேதங்களில் இஸ்லாம் பற்றியும், நபி(ஸல்) அவர்கள் பற்றியும் அறிவித்தல்கள் உள்ளன என்ற அறிவிப்பையும் குர்ஆன் கூறுகின்றது.
ஈஸா(அலை) அவர்கள் தனக்குப் பின்னர் “அஹ்மத்” என்ற புகழத் தக்க ஒரு தூதர் வருவார் எனக் கூறியதாக அல்குர்ஆன் கூறுகின்றது. (61:6) அதனை பைபிள் மொழிபெயர்ப்பாளர்கள் தேற்றவாளர் என மொழியாக்கம் செய்து மறைக்க முயன்று வருகின்றனர்.
இவ்வாறே, எழுத-வாசிக்கத் தெரியாத ஒரு நபியின் வருகை பற்றி முன்னைய வேதங்களில் முன்னறிவிப்புச் செய்யப்பட்டதையும் (7:157) அல்குர்ஆன் கூறுகின்றது.
இது போன்றே பைபிளில் ஸஹாபாக்கள் பற்றிச் செய்யப்பட்டுள்ள முன்னறிவிப்புப் பற்றியும் அல்குர்ஆன் கூறுகின்றது.
பைபிள்…?
மூஸா நபிக்கு அல்லாஹ் தவறாத் வேதத்தை வழங்கினான். இது யூத-கிறிஸ்தவர்களால் (தோரா) என அழைக்கப்படுகின்றது. ஈஸா(அலை) அவர்களுக்கு இன்ஜீல் அருளப்பட்டது. இதைக் கிறிஸ்தவ உலகம் “சுவிசேஷம்” என்ற பெயரிலும், “நற்செய்தி” என்ற பெயரிலும் அழைக்கின்றது.
மூஸா நபிக்கு வழங்கப்பட்டதாக நம்பப்படும் ஏடுகளாக பைபிளின் முதல் 5 ஆகமங்களும் கருதப்படுகின்றன. அத்துடன் சேர்ந்து இன்னும் பல புத்தகங்கள் உள்ளன. அவை பழைய ஏற்பாடு என்றும், ஈஸா நபியின் போதனைகள் வரலாற்றைச் சுமார் 70 நபர்கள் எழுதினர். அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு சுவிசேஷங்கள் மற்றும் போதகர்களின் கடிதங்கள், போதனைகள் “புதிய ஏற்பாடு” என்றும் நம்பப்படுகின்றன.
இவற்றில் அல்லாஹ் வழங்கிய வார்த்தைகளும், மனித வார்த்தைகளும் கலந்துள்ளன. அல்லாஹ்வின் வார்த்தைகளும் சிதைக்கப்பட்டுப் பொய்யும், மெய்யும் கலந்த கதம்பமாகவே பைபிள் உள்ளது. இருப்பினும் குர்ஆன் குறிப்பிட்ட பல முன்னறிவிப்புகள் பைபிளில் ஓரளவு சிதைவுடனாவது இன்று வரை காட்சியளிப்பது அற்புதமே! இந்த வகையில் ஸஹாபாக்கள் குறித்து தவ்றாத்-இன்ஜீலில் முன்னறிவிப்புச் செய்யப்பட்டுள்ளதாகக் கூறும் குர்ஆனின் வசனம் குறித்து இங்கே சுருக்கமாக விளக்க முனைகின்றோம்.
“முஹம்மத் அல்லாஹ்வின் தூதராவார். மேலும், அவருடன் இருப்போர் நிராகரிப்பாளர்கள் மீது கடுமையானவர்களாகவும், தமக்கிடையே கருணையுடையோராகவும் இருக்கின்றனர். அல்லாஹ்வின் பொருத்தத்தையும், அருட்கொடையையும் நாடி, ரூகூஃ செய்பவர்களாகவும், சுஜூது செய்பவர் களாகவும் அவர்களை நீர் காண்பீர். அவர்களது அடையாளம் அவர்களது முகங்களிலுள்ள சுஜூதின் அடையாளமாகும். இதுவே தவ்றாத்தில் அவர்களுக்குரிய உதாரணமாகும். இன்ஜீலில் மேலும் அவர்களுக்குரிய உதாரணமாவது ஒரு பயிரைப் போன்றதாகும். அது தனது முளையை வெளிப்படுத்தி, பின்னர் அதனைப் பலப்படுத்துகிறது. பின்னர் அது பலமாகித் தனது தண்டின் மீது நிலையாக நிற்கின்றது. விவசாயிகளை அது ஆச்சரியமடையச் செய்கின்றது. இவர்கள் மூலம் நிராகரிப்பாளர்களை அவன் கோபமூட்டுவதற்காகவே (இவ்வாறு செய்கின்றான்.) மேலும், அவர்களில் நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் புரிவோருக்கு மன்னிப்பையும், மகத்தான கூலியையும் அல்லாஹ் வாக்களிக்கின்றான்.” (அல்குர்ஆன் 48:29)
சூறதுல் ஃபத்ஹ் (வெற்றி) எனும் அத்தியாயத்தின் 29 ஆம் வசனம் இதுவாகும். இந்த வசனத்தில் நபித் தோழர்கள் பற்றி தவ்றாத்தில் சொல்லப்பட்ட ஒரு செய்தியும், இன்ஜீலில் சொல்லப்பட்ட ஒரு உவமையும் கூறப்படுகின்றன. இந்த உவமைகள் தவ்றாத்-இன்ஜீலில் நிச்சயம் இருந்திருக்க வேண்டும். இன்று இருக்கும் திரிபுபடுத்தப்பட்ட தவ்றாத், இன்ஜீல் இரண்டையும் உள்ளடக்கியதாக நம்பப்படும் பைபிளில் இந்த இரு செய்திகளும் இருப்பது அல்குர்ஆன் தெய்வீக நூல்தான் என்பதற்கான ஆதாரமாக அமைகின்றது.
தவ்றாத்தில் நபித்தோழர்கள்:
தவ்றாத்தில் நபித் தோழர்கள் பற்றிப் பின்வருமாறு கூறப்பட்டுள்ளதாகக் குர்ஆன் கூறுகின்றது;
- அவர்கள் நிராகரிப்போருடன் கடுமையாக இருப்பார்கள்.
- தமக்கிடையே கருணையுடன் நடந்துகொள்வார்கள்.
- அதிகம் வணக்கம் செய்வார்கள்.
- அல்லாஹ்விடமிருந்து சுவனத்தையும், அவனது திருப்தியையும் எதிர்பார்த்தே வணக்கம் புரிவர்.
- “தொழுகை” எனும் வணக்கம் மூலம் இன்மையிலும், மறுமையிலும் அவர்களது முகங்கள் பிரகாசமாக இருக்கும் என்ற செய்திகள் கூறப்படுகின்றன. குறிப்பாக ஸுஜூது-றுகூஃ பற்றிப் பிரஸ்தாபிக்கின்றது.
மூஸா நபிக்கு அருளப்பட்டதாக நம்பப்படும் ஆகமங்களில் ஐந்தாவது ஆகமம் உபாகமமாகும். (இவற்றில் ஏராளமான பொய்களும், அபத்தங்களும், அசிங்கங்களும் நிறைந்திருக்கின்றன என்பது தனி விஷயம்.)
இந்த உபாகமம் 34 அதிகாரங்களைக் கொண்டது. இதில் 34 ஆம் அதிகாரம் மூஸா நபியின் மரணத்தின் பின்னர் இடைச் செருகல் செய்யப்பட்டது எனக் கிறிஸ்தவ மிஷனரிகளில் சிலரே நம்புகின்றனர். ஏனெனில், அதில் மூஸா நபியின் மரணம், அதற்காக மக்கள் துக்கம் கொண்ட நிகழ்ச்சியெல்லாம் இடம்பெற்றுள்ளன. இறுதி வசனத்தில் மூஸா நபி போன்ற ஒரு தீர்க்கதரிசி இஸ்ரவேல் சமூகத்தில் அதன் பின்னர் அனுப்பப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. எனவே இது மூஸா நபியின் மரணத்தின் பின் நீண்ட காலத்தின் பின்னர் இடைச் செருகல் செய்யப்பட்டது என்பதில் சந்தேகமில்லை. எனவே உபாகமத்தின் இறுதி அத்தியாயம் 34 ஆம் அத்தியாயமல்ல; 33 ஆம் அத்தியாயமாகும். இது மூஸா நபியின் வஸிய்யத்தாகவும் இருக்கின்றது. இதோ! உபாகமம் அத்தியாயத்தின் 33 ஆம் அதிகாரத்தின் 1-3 வசனங்களைப் பாருங்கள்!
1. தேவனுடைய மனுஷனாகிய மோசே தான் மரணமடையுமுன்னே இஸ்ரவேல் புத்திரரை ஆசீர்வதித்த ஆசீர்வாத மானது:
2. கர்த்தர் சீனாயிலிருந்து எழுந்தருளி, சேயீரிலிருந்து அவர்களுக்கு உதயமானார்; பாரான் மலையிலிருந்து பிரகாசித்து, பதினாயிரங்களான பரிசுத்தவான்களோடே பிரசன்னமானார்; அவர்களுக்காக அக்கினிமயமான பிரமாணம் அவருடைய வலதுகரத்திலிருந்து புறப்பட்டது.
3. மெய்யாகவே அவர் ஜனங்களைச் சிநேகிக்கிறார்; அவருடைய பரிசுத்தவான்கள் எல்லாரும் உம்முடைய கையில் இருக்கிறார்கள்; அவர்கள் உம்முடைய பாதத்தில் விழுந்து, உம்முடைய வார்த்தைகளினால் போதனை யடைவார்கள்.
(உபாகமம் 33:1-3)
அந்தப் போதனையைக் கொண்டு வந்த தூதர்;
- 10,000 பேருடன் பிரசன்னமாவர் என்று கூறப்படுகின்றது.
- அவர்கள் பரிசுத்தவான்கள் என்றும் கூறப்படுகின்றது.
- அவர்களுக்காக அக்கினி மயமான பிரமானம் அவரது வலது கையிலிருந்து புறப்படும்.
- ஜனங்களைச் சினேகிப்பர்.
- அவரது பரிசுத்தவான்கள் கடவுளின் கையில் இருப்பார்கள்.
- அவர்கள் கடவுளின் பாதத்தில் விழுந்து வணங்குவார்கள்.
- கடவுளின் வார்த்தைகளால் போதனையடைவார்கள்.
இத்தகைய செய்திகள் மூஸா நபியின் இறுதி உபதேசத்தில் அடங்கியுள்ளது.
இந்த இடத்தில் பாரான் மலை பற்றிக் கூறப்படுவதால் அந்த மலை பற்றி பைபிள் கூறும் செய்திகளை முதலில் ஆராய்வது அவசியமாகின்றது.
இஸ்மாயில் நபி பற்றி பைபிள் பேசும் போது அவன் பாரான் வனாந்திரத்தில் குடியிருக்கையில்… (ஆதியாகமம் 21:21) என்று குறிப்பிடப்படுகின்றது. எனவே பாரான் மலை என்பது இஸ்மாயில் நபியுடன் சம்பந்தப்பட்ட அறபுப் பிரதேசமாகும். இந்த இஸ்மாயில் நபியின் சந்ததியில்தான் முஹம்மத் நபி பிறந்தார். பாரான் மலையுடன் இஸ்ரவேல் தூதர்கள் எவருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
எனவே பாரான் மலை என்பது அறபு நாட்டைத்தான் குறிக்கின்றது. அங்கு தன்னை நபியாகப் பிரகடனப்படுத்தி தேவனின் வார்த்தையைப் பிரசாரம் செய்தவர் முஹம்மத்(ஸல்) மட்டுமேயாகும்.
அவர்களது தோழர்கள் பற்றிப் பேசும் போது;
- ஜனங்களைச் சினேகிப்பர் என்று கூறப்படுகின்றது. அல்குர்ஆனும் அவர்கள் தமக்கிடையே பாசத்துடன் இருப்பர். சத்தியத்தை எதிர்க்காதோருடன் அன்பு பாராட்டுவர் என்றும் கூறுகின்றது.
- 10,000 பரிசுத்தவான்களுடன் அவர் பிரசன்னமாவார் என்று கூறப்படுகின்றது. “பத்ஹு மக்கா” எனும் மக்கா வெற்றியின் போது நபி(ஸல்) அவர்கள் 10,000 நபித் தோழர்களுடன் பிரசன்னமாகிச் சிலைகளால் அசுத்தப்பட்டிருந்த தேவ ஆலயத்தைப் பரிசுத்தப்படுத்தினார்கள். இந்த வரலாறு வேறு எந்தச் சமூகத்திலும் நடைபெறவில்லை.
- அக்கினி மயமான பிரமானம் பற்றி பைபிள் கூறுகின்றது. சத்தியத்தை எதிர்க்கும் நிராகரிப்போர் விடயத்தில் அவர்கள் அக்கினி மயமாகப் போராடுவர்; கடுமையாக நடந்துகொள்வர் என்பதை இது குறிக்கின்றது. போர்க் காலங்களில் இரத்த உறவை விடக் கொள்கைக்கு முன்னுரிமையளித்து அவர்கள் இறை நிராகரிப்பின் மீதுள்ள தமது கடுமையை வெளிப்படுத்தியுள்ளனர்.
- அவரது – அதாவது, நபியவர்களின் தோழர்களான ஸஹாபாக்கள் கடவுளின் கையில் இருப்பார்கள் என்பதன் மூலம் அல்லாஹ்விடம் பெரும் நன்மையையும், அவனது திருப்பொருத்தத்தையும் மட்டுமே அவர்கள் எதிர்பார்த்துப் பணியாற்றுவார்கள் என்பது கூறப்படுகின்றது. இதையே அவர்கள் அல்லாஹ்விடத்தில் சுவனத்தையும், அவனது திருப்பொருத்தத்தையும் எதிர்பார்ப்பார்கள் என்று அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது.
அவர்கள் கடவுளின் பாதத்தில் விழுந்து வணங்குவார்கள் என்று பைபிள் கூறுகின்றது. அல்குர்ஆன் மூஸா நபியின் வேதத்தில் “அவர்கள் ஸுஜூது செய்வார்கள்” என்று கூறப்பட்டுள்ளதாகக் கூறுகின்றது. “ஸுஜூது” என்றால் கால்பாதத்தின் முன்பகுதி, முழங்கால்கள், உள்ளங்கைகள், நெற்றி, மூக்கு என்பன நிலத்திற்பட விழுந்து வணங்குவதாகும். இதையே பைபிள் கடவுளின் பாதத்தில் விழுந்து வணங்குவார்கள் என்று கூறுகின்றது.
` கடவுளின் வார்த்தைகள் மூலம் நபித் தோழர்கள் போதனையடைவார்கள் என பைபிள் கூறுகின்றது. அல்குர்ஆன் (கலாமுல்லாஹ் – அல்லாஹ்வின்) தேவனின் வார்த்தைகளாகும். நபித் தோழர்கள் அல்குர்ஆன் மூலம் போதனை பெற்றே பரிசுத்தவான்களாக மாறினார்கள் என்பது வரலாறாகும்.
எனவே, நபித் தோழர்கள் பற்றித் தவ்றாத்தில் கூறப்பட்டதாக அல்குர்ஆன் கூறிய செய்தி திரிபுபடுத்தப்பட்ட தவ்றாத்திலும் அப்படியே இடம்பெற்றிருப்பது அல்குர்ஆன் இறைவேதம் என்பதற்கான சான்றாகும்.
புதிய ஏற்பாட்டில் நபித் தோழர்கள்:
இன்ஜீலில் நபித் தோழர்கள் பற்றிப் பின்வருமாறு கூறப்பட்டிருப்பதாக அல்குர்ஆன் கூறுகின்றது;
“..இன்ஜீலில் மேலும் அவர்களுக்குரிய உதாரணமாவது ஒரு பயிரைப் போன்றதாகும். அது தனது முளையை வெளிப்படுத்திப் பின்னர் அதனைப் பலப்படுத்துகிறது. பின்னர் அது பலமாகித் தனது தண்டின் மீது நிலையாக நிற்கின்றது. விவசாயிகளை அது ஆச்சரியமடையச் செய்கின்றது. இவர்கள் மூலம் நிராகரிப்பாளர்களை அவன் கோப மூட்டுவதற்காகவே (இவ்வாறு செய்கின்றான்.)..” (அல்குர்ஆன் 48:29)
ஒரு விவசாயி ஒரு பயிரை நடுகின்றான். அது தனது முளையை வெளிப்படுத்துகின்றது. பின்னர் அந்த முளை பலப்படுகின்றது. பின்னர் அது தனது தண்டின் மீது பலம் பெற்றுத் தனியாக நிற்கின்றது. அதன் வளர்ச்சியும், அதன் மூலம் கிடைக்கும் பலனும் விவசாயியை ஆச்சரியமடையச் செய்கின்றது. எதிரிகளைக் கோபங்கொள்ளச் செய்கின்றது.
நபி(ஸல்) அவர்கள் தனி நபராகத் தனது பிரசாரப் பயணத்தை ஆரம்பித்தார்கள். ஒருவர்-இருவராகச் சத்தியத்தை ஏற்றனர். பலஹீனமான நிலையிலிருந்தனர். எதிரிகளில் அச்சுறுத்தல்களைச் சந்தித்தனர். பின்னர் அவர்கள் சிறுகச் சிறுகப் பலம் பெற்று வளர்ச்சியடைந்து தமது சொந்தப் பலத்தில் நிமிர்ந்து நின்றனர். பின்னர் அந்த நபித் தோழர்கள் – மரங்கள் கனிதர ஆரம்பித்தனர். விவசாயியே ஆச்சரியப்படும் அளவுக்கு அவர்களின் வளர்ச்சியிருந்தது. இதைப் பார்த்து இஸ்லாத்தை ஏற்காத எதிரிகள் பொறாமை கொண்டார்கள் என்றும் இந்த வசனம் கூறுகின்றது.
இந்த வர்ணனை இன்ஜீலில் இருப்பதாக அல்குர்ஆன் கூறுகின்றது.
இதோ! புதிய ஏற்பாட்டின் மத்தேயு சுவிசேஷத்தின் 13 ஆம் அதிகாரத்தின் 3-9 வரையுள்ள வசனங்களைப் படித்துப் பாருங்கள்!
3. அவர் அநேக விசேஷங்களை உவமைகளாக அவர்களுக்குச் சொன்னார்; கேளுங்கள், விதைக்கிறவன் ஒருவன் விதைக்கப் புறப்பட்டான்.
4. அவன் விதைக்கையில், சில விதை வழியருகே விழுந்தது; பறவைகள் வந்து அதை பட்சித்துப்போட்டது.
5. சில விதை அதிக மண்ணில்லாத கற்பாறை இடங்களில் விழுந்தது; மண் ஆழமாயிராததினாலே அது சீக்கிரமாய் முளைத்தது.
6. வெயில் ஏறினபோதோ, தீய்ந்து போய், வேரில்லாமையால் உலர்ந்து போயிற்று.
7. சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் வளர்ந்து அதை நெருக்கிப்போட்டது.
8. சில விதையோ நல்ல நிலத்தில் விழுந்து, சிலது நூறாகவும், சிலது அறுபதாகவும், சிலது முப்பதாகவும் பலன் தந்தது.
9. கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றார்.
(மத்தேயு 13:3-9)
இந்த உவமானத்தில் இயேசு ஒரு விவசாயி பற்றிக் கூறுகின்றார்கள். அவர் விதைக்கும் போது சில தவறி விழுந்து விடுகின்றன. அதைப் பறவைகள் கொத்திச் செல்கின்றன. சில செத்து விடுகின்றன என்றெல்லாம் கூறுகின்றார்.
நபி(ஸல்) அவர்கள் செய்த போதனைகளைச் சிலை வணங்கிகள் மறுத்தனர். நயவஞ்சகர்கள் ஏற்றது போல் நடித்தனர். ஆனால், உள்ளத்தில் ஈமான் இல்லாததால் அவர்களுக்கு அது பயன் தராது போயினர். சிலர் ஏற்றுப் பின்னர் சோதனைகளின் போது தடம் புரண்டனர். ஆனால் உண்மையான நபித் தோழர்கள் பயிரைப் போன்று வளர்ந்து உறுதி பெற்று பலன் தர ஆரம்பித்தனர். இதைக் காதுள்ளவன் கேட்டுப் பயன் பெற வேண்டுமென்று இயேசு கூறியதாக மத்தேயு கூறுகின்றது.
இது பரலோக ராஜ்யத்தின் இரகசியங்கள் என்று வேறு இயேசு கூறியதாக 11 ஆம் வசனம் கூறுகின்றது.
அவதானிக்க வேண்டிய அம்சம்:
மூஸா நபியினதும், ஈஸா நபியினதும் இந்த இரு முன்னறிவிப்புகளும் இறுதித் தூதர் தன் தோழர்கள் மூலம் பலம் பெற்றுத் தனது தூதை உறுதிப்படுத்துவார். அவர் தனது தோழர்களுடன் வளர்ந்து வெற்றிவாகை சூடுவார் என்பது பற்றிப் பேசுகின்றது.
இந்த உவமைகள் தவ்றாத்திலும், இன்ஜீலிலும் இருக்கின்றன என அல்குர்ஆன் கூறுகின்றது. இது பற்றி அல்குர்ஆன் பேசும் வசனம் (வெற்றி) “அல்ஃபத்ஹ்” என்ற அத்தியாயத்தில்தான் இடம்பெற்றுள்ளது.
அதாவது, முஸ்லிம்களால் மக்கா வெற்றிகொள்ளப்படும் என்பது குறித்து அது நடப்பதற்குச் சுமார் 2 வருடங்களுக்கு முன்னர் அருளப்பட்ட அத்தியாயத்தில் மூஸா நபி, இயேசு ஆகியோர் இந்த வெற்றி குறித்து முன்னறிவிப்புச் செய்த வசனம் இடம்பெற்றுள்ளது.
நபி(ஸல்) அவர்களும், நபித் தோழர்களும் மக்காவுக்கு உம்றாச் செய்யச் சென்ற போது மக்கத்துக் காஃபிர்கள் தடுத்தனர். அப்போது ஓர் உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டது. அது “ஹுதைபிய்யா உடன்படிக்கை” என்று அழைக்கப்படுகின்றது.
இந்த உடன்படிக்கையின் படி முஸ்லிம்கள் குறித்த ஆண்டில் உம்றாச் செய்ய முடியாது; அடுத்த ஆண்டு உம்றாச் செய்யலாம்.
இது நபித் தோழர்களுக்கு மனக் கவலை அளித்த போதுதான் இந்த அத்தியாயம் அருளப்பட்டது.
“(நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு மிகத் தெளிவான வெற்றியை வழங்கினோம்;.” (48:1)
என்றே இந்த அத்தியாயம் ஆரம்பமாகின்றது. இந்த அத்தியாயம் அருளப்பட்டதும் இனிக் குறைஷிகள் எம்மை நோக்கிப் படையெடுத்து வர மாட்டார்கள். நாம் (மக்கா வெற்றிக்காகப்) படை திரட்டிக் கொண்டு செல்வோம் என நபி(ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்தார்கள்.
குறைஷிகள் ஒப்பந்தததை முறித்த போது இது நடந்தது.
உம்றாச் செய்ய முடியாமல் திரும்பும் போது கவலைகொண்ட நபித் தோழர்களுக்கு உங்களைப் பற்றி மூஸாவின் தவ்றாத்திலும், ஈஸாவின் இன்ஜீலிலும் இவ்வாறு சொல்லப்பட்டுள்ளது. நீங்கள் பலம் பெற்று வெற்றிவாகை சூடுவீர்கள் என்ற முன்னறிவிப்பு உள்ளதென்று கூறுவது பொருத்தமாகவுள்ளதுடன், ஆழமாகவும் சிந்திக்கவும் வேண்டிய அம்சமாகும்.
அடுத்து, இந்த முன்னறிவிப்புப் பற்றிப் பேசும் வசனத்திற்கு முன்னைய வசனம் இஸ்லாம் மேலோங்கும் என்பதைக் கூறித்தான் இது குறித்த முன்னறிவிப்பும், உங்கள் பற்றிய வர்ணனையும் முன்னைய வேதங்களில் உள்ளன என்றும் கூறுகின்றது.
இதற்கு முன்னைய வசனம்;
“அனைத்து மதங்களை விடவும் மேலோங்கச் செய்வதற்காக அவனே தனது தூதரை நேர்வழியையும், இ(ச்சத்திய மார்க்கத்)தைக் கொண்டும் அனுப்பி வைத்தான். சாட்சி கூற அல்லாஹ்வே போதுமானவன்.”
(அல்குர்ஆன் 48:28)
எனவே, பைபிளில் ஒரு முன்னறிவிப்பு உள்ளது என அல்குர்ஆன் கூறுகின்றது.
நபி(ஸல்) அவர்கள் எழுதவோ, வாசிக்கவோ தெரியாத ஒரு நபி. அவர் வேதம் பற்றி 40 வயது வரை அறியாதவராகவே இருந்தார். அவர் போதித்த வேதத்தில் முன்னைய வேதத்தில் இப்படி இருக்கின்றது என்று கூறப்படுகின்றது. அது அப்படியே முன்னைய வேதம் திரிபுபடுத்தப்பட்ட பின்னரும் இருப்பது அல்குர்ஆன் இறை வேதம் என்பதற்கு இது மிகப் பெரும் சான்றாகத் திகழ்கின்றது.

www.islamkalvi.com

மறைவான வணக்கம்

இஸ்லாமிய சகோதரர்களே! இறைவன் கடமையாக்கி இருக்கின்ற மற்றொரு வழிபாடு நோன்பாகும். தொழுகையைப் போல இந்த வழிபாடும் ஆரம்பத்திலிருந்து எல்லாத் தூதர்களின் மார்க்கங்களிலும் கடமையாகவே இருந்து வந்திருக்கிறது. முதலில் தோன்றிய சமுதாயத்தவர்களும் நோன்பு பிடித்துக் கொண்டிருந்தார்கள். என்றாலும், நோன்பின் சட்டங்கள், அதன் எண்ணிக்கை, அது நீடிக்க வேண்டிய நேரம் ஆகியவற்றில் ஒரு மார்க்கத்தும் மற்றொரு மார்க்கத்துக்கும் இடையில் வேற்றுமை இருந்து வந்தது. இன்றும் கூட பெரும்பாலான மதங்களில் ஏதேனும் ஒரு வடிவத்தில் நோன்பு இருக்கத்தான் செய்கிறது. ஆனால் மக்கள் தம் சார்பில் பலவற்றை இணைத்து அதன் வடிவத்தை கெடுத்திருந்தாலும் சரி! திருக்குர்ஆன் கூறுகிறது:
    ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். 2:183
    இதிலிருந்து நீங்கள் சிந்திக்கவேண்டும். எல்லாக் காலத்திலும் இந்த இறைவழிபாட்டைக் கடமையாக்குவதற்கு நோன்பில் என்னதான் இருக்கிறது?
    நோன்பை தவிர்த்து மற்ற இறை வழிபாடுகள் எல்லாம் ஏதேனும் ஒரு விதத்தில் வெளிப்படையான செயல்களாகவே நிறைவேற்றப்படுகின்றன. உதாரனமாக தொழுகை, ஹஜ் போன்ற இறைவழிபாடுகள் பார்வைக்கு மறையாதவை. நீங்கள் நிறைவேற்றுகிற அதே நேரத்தில் அது மற்றவர்களுக்கு தெரிந்து விடுகிறது. நீங்கள் நிறைவேற்றாவிட்டாலும் தெரிந்து விடுகிறது.
    ஆனால் நோன்பு நிறைவேற்றுகின்ற மனிதனையும் இறைவனையும் தவிர்த்து வேறு யாருக்கும் தெரிய முடியாது. ஒரு மனிதன் எல்லோருக்கும் எதிரில் ‘ஸஹ்ரில்’ சாப்பிட்டு நோன்பு பிடிக்கலாம். நோன்பு திறக்கும் நேரம்வரை அவன் வெளியில் தெரியும்படி சாப்பிடாமலும் குடிக்காமலும் இருக்கலாம். ஆனால் ஒளிந்து மறைந்து தண்ணீர் குடித்தால் அது இறைவனைத்தவிர வேறு யாருக்கும் தெரிய முடியாது. அவன் நோன்போடு இருக்கிறான் என்றே எல்லோரும் நினைத்துக் கொண்டிருப்பார்கள். உண்மையில் அவன் நோன்பாளி அல்லன்.
    உறுதியான நம்பிக்கையின் அடையாளம்
    நோன்புக்குறிய இந்தத் தனித்தன்மையை முன்னால் வைத்துக் கொள்ளுங்கள். அப்புறம் சிந்தனை செய்யுங்கள்; ஒரு மனிதன் உண்மையாகவே நோன்பு நோற்கிறான். திருட்டுத்தனமாக அவன் சாப்பிடுவதில்லை; குடிப்பதுமில்லை. கடும் வெப்பத்தினால் தொண்டை வரண்ட நிலையிலும் அவன் ஒரு துளி தண்ணீர் அருந்துவதுமில்லை. கடும் பசியினால் கண் பார்வை குன்றிப்போனாலும் அவன் ஒரு கவளம் உணவும் உண்ண நினைப்பதுமில்லை.
    அந்த மனிதனுக்கு இறைவன் எல்லா மர்மங்களும் தெரிந்தவன் என்பதில் எவ்வளவு நம்பிக்கை இருக்கிறது! தன்னுடைய செயல்கள் முழு உலகத்துக்கும் மறைந்து விட்டாலும் இறைவனின் பார்வையிலிருந்து மறைய முடியாது என்று எவ்வளவு உறுதியாக அவன் நம்புகிறான்!
    மிகப்பெரும் சிரமங்களையெல்லாம் அவன் ஏற்றுக் கொள்கிறான்; ஆனால், இறையச்சத்தால் தான் நோற்கின்ற நோன்பை முறிக்கும் எந்தக் காரியத்தையும் அவன் செய்வதில்லை என்றால், அவன் உள்ளத்தில் எப்படிப்பட்ட உறுதியான இறையச்சம் இருக்க வேண்டும்!
    இந்த இடைக்காலத்தில் மறுமை குறித்து ஒரு வினாடி கூட அவன் மனதில் எவ்விதச் சந்தேகமும் தோன்றுவதில்லையென்றால், மறுமையில் கிடைக்கும் நற்கூலிகள், தண்டனைகள் பற்றி அவனுக்கு எவ்வளவு திடமான நம்பிக்கை இருக்க வேண்டும்! ‘மறுமை வருமா வராதா? அதில் நற்கூலியும் தண்டனையும் உண்டா இல்லையா? என்று அவன் மனதில் சிறிதளவாகிலும் சந்தேகம் ஏற்பட்டு விட்டால், அவனால் தனது நோன்பை என்றைக்கும் நிறைவேற்றவே முடிந்திருக்காது.
    சந்தேகம் ஏற்பட்ட பிறகு இறைக்கட்டளையைச் செயற்படுத்துவதற்கென்று எதையும் சாப்பிடக்கூடாது; எதையும் அருந்தக் கூடாது எனும் எண்ணத்தில் மனிதன் நிலையாக இருப்பது சாத்தியமான ஒன்று அல்ல.
    இவ்வாறு ஒவ்வொரு வருடமும் முழுமையாக ஒரு மாதத்திற்கு தொடர்ந்தால்போல் முஸ்லிம்களின் இறை நம்பிக்கைக்கு தேர்வு வைக்கிறான் இறைவன். இந்த தேர்வில் மனிதன் எந்த அளவு வெற்றி பெற்றுக்கொண்டே போகிறானோ, அந்த அளவுதான் அவனுடைய இறை நம்பிக்கை வலிமை பெற்றுக்கொண்டே போகும். இது தேர்வுக்குத் தேர்வு போன்றது, பயிற்சிக்குக் பயிற்சி போன்றது.
    யாரேனும் ஒருவரிடம் ஒரு பொருளை நீங்கள் அமானிதமாக ஒப்படைத்திருந்தால், அவருடைய நாணயத்தை பரிட்சை செய்து பார்க்கிறீர்கள். இந்த பரிட்சையில் அவர் முழுவெற்றி வெற்றியடைந்து தம்மிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்ற பொருளுக்குத் துரோகம் செய்யவில்லை என்றால் அமானிதம் சுமையைத் தாங்குவதற்குறிய தகுதி இன்னும் அதிகமாக அவருக்கு வந்துவிடும். அவருடைய நாணயம் மேலும் வளர்ந்துகொண்டே போகும். இந்த பரிட்சையில் நீங்கள் தேர்ந்துவிட்டால், இறைவனுக்கு பயந்து மற்றப் பாவங்களிலிருந்தும் ஒதுங்கும் மனப்பக்குவம் உங்களுக்கு அதிகமாக ஏற்பட்டுவிடும்.
    அனைத்து மர்மங்களையும் இறைவன் நன்கு அறிகின்றான் என நீங்கள் உறுதியாக நம்புகிறீர்கள். எனவே எந்த சந்தர்ப்பத்திலும் இறைக்கட்டளையை மீறுவதிலிருந்து விலகி நிற்கிறீர்கள். யாரும் உங்களை பார்க்கது இருந்தாலும் சரியே! மேலும் வாழ்வின் ஒவ்வொரு திருப்பத்திலும், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மறுமை நாள் உங்கள் நினைவிற்கு வந்து விடுகிறது. அன்றைய நாளில் அனைத்து இரகசியங்களும் அம்பலமாகிவிடும்.
    செய்யும் நன்மைக்கு நற்கூலியும், தீமைக்கு தண்டனையும் யாதொரு தயவு தாட்சண்யமும் இல்லாமல் கிடைக்கும் என்ற எதார்த்த உண்மையை நீங்கள் உணர்கிறீர்கள். எனவே இறையச்சம் உள்ளவர்களாக திகழ முழு முயற்சி மேற்கொள்கிறீர்கள்

www.readislam.net

மண்ணறை

நபி(ஸல்) கூறினார்கள்: மனிதன் மண்ணறையில் வைக்கப்பட்டு அவனுடைய நண்பர்கள் அவனை விட்டும் திரும்பிச் செல்லும் போது அவன் அவர்களின் செருப்பின் ஓசையைக் கேட்பான். இரு மலக்குகள் அவனை உட்காரவைத்து(ஒரு மனிதரைக் காண்பித்து) இம் மனித ரைப்பற்றி நீ என்ன கூறிக்கொண்டிருந்தாய்? என அவனிடம் கேட்பார்கள். ஒரு முஃமின் இவர் அல்லாஹ்வின் அடியாரும் அவனின் திருத்தூதருமாவார் என நான் சாட்சி கூறினேன் என்று கூறுவான். நரகத்தில் உனது இருப்பிடத்தைப் பார். இதற்குப் பகரமாக சுவர்க்கத்தில் ஒரு இருப்பிடத்தை அல்லாஹ் உனக்கு ஏற்படுத்தி விட்டான் என அவனிடம் கூறப்படும்;. அவ்விரண்டையும் அவன் பார்ப்பான். ஒரு காஃபிர் அல்லது நயவஞ்சகனிடம் இம்மனிதரைப்பற்றி நீ என்ன கூறிக் கொண்டிருந்தாய்? எனக் கேட்கப்படும் அதற்கவன் எனக்குத் தெரியாது மக்கள் கூறியதைக் கூறிக்கொண்டிருந்தேன் எனக் கூறுவான். அப்போது அவனிடம் நீ அவரை அறிந்து கொள்ளவுமில்லை பின்பற்றவுமில்லை எனக் கூறப்படும். பிறகு அவன் இரும்புச் சம்மட்டியால் ஓங்கி அடிக்கப்படுவான். அப்போது அவன் சப்தமிடுவான். அதை மனிதர்களையும் ஜின்களையும் தவிர அனைவரும் கேட்பார்கள்.(நஸயீ)
மண்ணறையில் உடலுக்கு மீண்டும் உயிர் கொடுக்கப்படுவது உலகில் மனித அறிவு விளங்கிக் கொள்ள முடியாத மறுமை விஷயமாகும். மனிதன் மண்ணறையில் நற்பாக்கியத்திற்குத் தகுதியானவனாக இருந்தால் நற்பாக்கியம் வழங்கப்படுவான். வேதனைக்குத் தகுதியானவனாகயிருந்தால் வேதனை செய்யப்படுவான்
அல்லாஹ் கூறுகிறான்: காலையிலும் மாலையிலும் அவர்கள் நரக நெருப்பு முன் கொண்டு வரப்படுவார்கள். மேலும் மறுமைநாள் வந்துவிடும்போது ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை கடினமான வேதனையில் புகுத்துங்கள் எனக் கூறப்படும். (40:46) மண்ணறை வேதனையிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுங்கள் என்று நபி(ஸல்) கூறினார்கள்.
தெளிவான அறிவு மண்ணறை வேதனையை மறுக்காது. காரணம் இதுபோன்ற நிலையை மனிதன்; தன் வாழ்வில் பார்க்கத்தான் செய்கிறான். உதாரணமாக தூங்கக் கூடிய ஒருவன் கனவில் கடினமாக வேதனை செய்யப்படுவதாக உணர்ந்து சப்தமிடுகிறான் உதவியும் தேடுகிறான். ஆனால் அவனுக்கருகில் இருப்பவன் இதை உணர்வதில்லை. உயிரோடு உறங்கக்கூடியவனுடைய வேதனையையே அருகிலிருப்பவன் உணர முடியவில்லை என்பது போல மரணித்தவனின் மண்ணறை வேதனையை உயிருள்ளவன் நேரடியாக உணரமுடியாது. மண்ணறை வேதனை உடலுக்கும் உயிருக்கும் சேர்ந்ததேயாகும்.
 நிச்சயமாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: மண்ணறை மறுமையின் தங்குமிடங்களில் ஆரம்ப இடமாகும். இதிலிருந்து ஒருவன் ஈடேற்றம் பெற்று விட்டால் இதற்குப் பின்னுள்ளவை இதை விட எளிதானதாகும். இதிலிருந்து ஈடேற்றம் பெறாவிட்டால் இதற்குப் பின்னுள்ளவை இதை விட மிகக் கடினமானதாகும். எனவே மண்ணறை வேதனையிலிருந்து முஸ்லிம்கள் பாதுகாப்புத்; தேடுவது அவசியமாகும். குறிப்பாக தொழுகையில் ஸலாம் கொடுப்பதற்கு முன் பாதுகாவல் தேடுவது அவசியமாகும். இவ்வாறே நரகத்திலும் மண்ணறையிலும் வேதனை செய்யப்படுவதன் முதற்காரணமான பாவங்களிலிருந்து தூரமாகுவதற்கு முயல வேண்டும். இதற்கு மண்ணறை வேதனையென சொல்லப்படுவதற்குரிய காரணம் பெரும்பாலும் மக்கள் மண்ணறையில்தான் அடக்கம் செய்யப்படுகிறார்கள் என்பதாகும். ஆனால் தண்ணீரில் மூழ்கியவர்கள் நெருப்பில் எரிந்துபோனவர்கள் மிருகங்களால் தின்னப்பட்டவர்கள் இன்னும் இதுபோன்றவர்கள் திரைமறைவான வாழ்க்கையில் வேதனை செய்யப்படுவார்கள் அல்லது நற்பாக்கியம் வழங்கப்படுவார்கள்.
மண்ணறை வேதனை என்பது இரும்பாலான அல்லது வேறு ஏதாவது சம்மட்டியலால் அடிக்கப்படுவது அல்லது இறந்தவரின் விலா எலும்புகள் ஒன்றோடொன்று பின்னிப் பிணையும் அளவிற்கு நெருக்கப்படுவது மண்ணறையில் இருள் நிரப்பப்படுவது நெருப்பாலான விரிப்பு விரிக்கப்படுவது நரகிலிந்து ஒரு வாசல் திறந்து வைக்கப்படுவது அவனின் தீய செயல்கள் துர்நாற்றமுள்ள அருவருப்பான முகமுடைய மனிதன் போன்று உருவெடுத்து அவனுடன் அமர்ந்திருப்பது இப்படிப் பல வகைகள் உள்ளன.
அடியான் காஃபிராகவோ நயவஞ்சகனாகவோ இருந்தால் வேதனை நிரந்தரமாக இருக்கும். பாவியான முஃமினாக இருந்தால் அவனது பாவம் அளவிற்கு வேதனை மாறுபாடும். சிலசமயம் வேதனை நிறுத்தப்படும். ஆனால் முஃமின்; மண்ணறையில் அருள்பாலிக்கப்படுவான். அதாவது அவனது மண்ணறை விசாலமாக்கப்பட்டு ஒளி நிரப்பப்படும். சுவர்க்கவாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக அதன் நறுமணம் வீசிக்கொண்டிருக்கும். சுவர்க்கத்தின் விரிப்பு விரிக்கப்படும். அவனது நற்செயல்  மண்ணறையில் அவனை மகிழ்விக்கும்.

www.readislam.net

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes